Ticker

6/recent/ticker-posts

Ad Code

'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை

...



ஜூலை 12,2020

நாட்டில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் சீசனும் துவங்கியுள்ளதால், நிலைமை மோசமாக வாய்ப்புள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, எட்டு லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில், டெங்கு வைரசின் சீசனும் துவங்கியுள்ளதால், ஆராய்ச்சியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, மருத்துவஆராய்ச்சிகளுக்கு, நிதியுதவி செய்யும் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நச்சுயிரியல் நிபுணருமான ஷாஹித் ஜமீல் கூறியதாவது:கடந்த, 2016 - 2019 ஆண்டுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஒன்று முதல், இரண்டு லட்சம் பேர் வரை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது தெரிகிறது. தென் மாநிலங்களில், ஆண்டு முழுதும், பலர், டெங்கு வைரசால் பாதிக்கப்படுகின்றனர்.
வட மாநிலங்களில், பருவமழை காலத்திலும், குளிர் காலத்திற்கு முன்பும், இந்த வைரஸ் தீவிரமடைகிறது. கொரோனாவுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் தனித்தனி பரிசோதனைகள் செய்யவேண்டும் என்பதால், மருத்துவ துறையினருக்கு, இது பெரும் சவாலாக இருக்கும். எனினும், இந்தியாவில், டெங்கு காய்ச்சலுக்கு, சிறந்த முறையில் பரிசோதனைகள் நடத்தி, சிகிச்சை அளிப்பது ஆறுதல் அளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

கோல்கட்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக துணை வேந்தரும், நச்சுயிரியல் நிபுணருமான துருவ்ஜோதி சத்தோபாத்யாய், ''கொரோனா, டெங்கு என இரண்டு வைரசுகளும், காய்ச்சல்,தலைவலி, உடல் வலி என பொதுவான அறிகுறிகளை கொண்டுள்ளன.

''கொரோனா பரவலுக்கு மத்தியில், டெங்கு வைரஸ் சீசனும் துவங்கியுள்ளதால், நிலைமை மேலும் மோசமாக வாய்ப்புள்ளது,'' என்றார்.

Post a Comment

0 Comments