Ticker

6/recent/ticker-posts

Ad Code

அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் ஒழியுமா?

...



|ஜூலை 12,2020


உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட, தாதா, விகாஸ் துபே போல பல தாதாக்கள், ஒரு கட்சியில் மட்டுமின்றி, தேசிய அளவில், அனைத்து அரசியல் கட்சிகளிலும் செல்வாக்குடன் உள்ளனர்.

அரசியலில், கிரிமினல்களின் ஆதிக்கத்தால், ஜனநாயக துாண்கள் ஆட்டம் கண்டு வருகின்றன.அரசியல்வாதிகள், தேர்தல் நேரத்தில், கிரிமினல்களின் உதவியை நாடுகின்றனர்.வெற்றி பெற்ற பின், அரசியல்வாதிகளின் உதவி, கிரிமினல்களுக்கு தேவைப்படுகிறது.

கிரிமினல்கள் மீதான குற்ற விசாரணையில், அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக, புலனாய்வு அமைப்பினருக்கு, ஆதாரங்களை திரட்டுவது கடினமாக உள்ளது.சமீப ஆண்டுகளாக, கிரிமினல்களுக்கு, தேர்தலில் நின்று, நேரடியாக அதிகாரம் செலுத்தும் ஆசை அதிகரித்துள்ளது. அதன்படி பலர் போட்டியிட்டுள்ளனர். சிலர் வென்றும் உள்ளனர்.இந்த வகையில், கடந்த, 2009-19 வரை, லோக்சபாவில், பெண்கள் மீதான குற்ற வழக்குகளில் சிக்கிய எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 850 சதவீதம் உயர்ந்துள்ளது.


இதே காலத்தில், இது போன்ற வழக்குகளை சந்தித்த, 231 பேர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.பெண்கள் மீதான கிரிமினல் குற்றங்களில், பா.ஜ., 21 எம்.பி., மற்றும் சட்டசபை உறுப்பினர்களுடன் முதலிடத்தில் உள்ளது.காங்., 16 பேருடன், இரண்டாவது இடத்திலும், ஒய்.எஸ்.ஆர். காங்., ஏழு பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.கடந்த, ஐந்து ஆண்டுகளில், பா.ஜ., காங்., பகுஜன் சமாஜ் ஆகியவை, முறையே, 66, 46 மற்றும், 40 கிரிமினல் வேட்பாளர்களை தேர்தலில் களமிறக்கியுள்ளன.கிரிமினல் வழக்குகளில், 756 எம்.பி.,க்கள், 4,063 சட்டசபை உறுப்பினர்கள் சிக்கியுள்ளனர்.

76 எம்.பி.,க்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மீது, பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் உள்ளதாக, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் குறித்தும், அவர்கள் அரசுக்கு இணையாக நடத்தும் ராஜாங்கம் குறித்தும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர், என்.என்.வோரா, 27 ஆண்டுகளுக்கு முன், ஆய்வறிக்கை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் பேசி வருகின்றனவே தவிர, உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.ஆண்டுக்காண்டு, அரசியலில், கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை கண்ட உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களின் வழக்கு விபரங்களை வலைதளத்திலும், ஊடகங்களிலும் வெளியிட வேண்டும் என, கடந்த, பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், கிரிமினல் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளரை நிறுத்தினால், தகுதி வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லை என்பதை, கட்சிகள் ஆதாரத்துடன் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


இதற்கான காரணத்தை, உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.அதில்,'கிரிமினல் வழக்குகளில் சிக்கிய எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 2004ல், 24 சதவீதமாக இருந்தது. இது, 2009ல், 30 சதவீதமாகவும், 2014ல், 34 சதவீதமாகவும் அதிகரித்து, 2019ல், 43 சதவீதமாக உயர்ந்துள்ளது' என, உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துஉள்ளது.அரசியல் கட்சிகள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, கிரிமினல் வேட்பாளருக்கு வக்காலத்து வாங்கி விட முடியும். எனவே, பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் தான், அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கத்தை ஒழிக்க முடியும்.

கிரிமினல் பின்னணி உள்ளோருக்கு, அரசியல் கட்சிகள், 'சீட்' கொடுக்கக் கூடாது; அப்படியே கொடுத்தாலும், அந்த வேட்பாளருக்கு, ஓட்டு போடக் கூடாது என, மக்கள் முடிவெடுக்க வேண்டும்.அரசியல்கட்சியினர், போலீசார், தொழிலதிபர்கள் ஆகியோரின் சட்டப் புறம்பான கூட்டணிக்கு முடிவு கட்டாத வரை, விகாஸ் துபே போன்ற தாதாக்கள், காளான்கள் போல முளைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்

Post a Comment

0 Comments